மின்கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

 
erode

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம், மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்தியதற்காகவும், 1 முதல்  5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், 31-வது வார்டில் மாநகராட்சி சார்பில் 4 போர்வெல்கள் உள்பட 20 போர்வெல்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அவற்றுக்கு முறையான டேங்க் ஆப்ரேட்டர்கள் நியமிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார். கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், கவுன்சிலர்கள் புகைப்படம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாநகராட்சி பகுதியில் போதுமான தூய்மை பணியாளர்கள் நியமிக்கப் படவில்லை என கூறினார. அப்போது, அதற்கு திமுக கவுன்சிலர்  பதிலளித்து பேசியதால் இருவருக்கும் இடைய காரசார விவாதம் நடைபெற்றது. 

erod

தொடர்ந்து அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசியபோது, மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரமும் மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வரப்படவில்லை என்றும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது பொதுமக்களை பாதிக்கும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினர்.