ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக ஆயத்தம்!

 
erode

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ மறைவையொட்டி வர உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையொட்டி, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பது தொடர்பாக அதிமுக மாவட்ட அலுவலகத்தில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக வார்டு செயலாளர்களுக்கு, வாக்காளர் பட்டியலை அவர் வழங்கி, தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனையை வழங்கினார். 

பின்னர் அவர் பேசியதாவது :- திமுக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நல திட்டங்களை நிறுத்தி உள்ளது. சொத்து வரி, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு காரணமாக ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை இந்த அரசு சுமையை ஏற்றி உள்ளது. அதனால் பொதுமக்கள் மிகவும் வெறுப்புடன் உள்ளனர். 

admk

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,500 வழங்கினார். அப்போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 5000 வழங்க வேண்டும் என கூறினார். ஆனால் கடந்தாண்டு பொங்கலுக்கு எந்த நிதி உதவியும் அவர் செய்யவில்லை. மாறாக தரம் குறைந்த மளிகை பொருட்களை மக்களுக்கு வழங்கினார். தற்போது ரூ.1,000 மட்டும் மக்களுக்கு வழங்குகிறார். அதிமுக திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடத்துவதாக அறிவித்ததை ஒட்டி, மக்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், தாலிக்கு தங்கம் போன்றவைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டன. 

அப்போது, சட்டம் - ஒழுங்கு நன்கு சிறப்பாக இருந்தது. தற்போது தெருவுக்கு தெரு சட்ட விரோதமாக டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி எப்போது மயக்கத்தில் இருக்கும் நிலையை உருவாக்கி உள்ளனர். எனவே இந்த ஆட்சிக்கு பாடம் கற்பிக்க 2026-இல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர, இடைத்தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.