திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... தருமபுரி அருகே சோகம்!

 
suicide

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே காதல் திருமணம் செய்த ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா(27). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அங்கு ஓட்டுநராக பணிபுரிந்த தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் அர்ச்சனா, பண்டாரசெட்டி அள்ளியில் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அர்ச்சனா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

dharmapuri gh

இந்த நிலையில், சம்பவத்தற்கு வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் பொம்மிடி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை ஆண்டில் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமை காரணமா? என வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.