ஆலங்குடி அருகே ஆடுமேய்க்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆடு மேய்க்க சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள இடையன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பார்த்தசாரதி (18). இவர் நாள்தோறும் தனது வீட்டில் உள்ள ஆடுகளை வயல்காட்டிற்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, மாலையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை மதியம்  ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். மாலை ஆடுகள் வீட்டிற்கு வந்த நிலையில், பார்த்தசாரதி மாயமாகினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். எனினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தோப்புக்கொல்லை பகுதியில் உள்ள கிணற்றின் அருகே பார்த்த சாரதியின் உடைகள் மற்றும் செல்போன் கிடந்துள்ளது. 

pudukottai

இதுகுறித்து அவரது உறவினர்கள் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, பார்த்தசாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, வல்லத்திராக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.