ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை... ஆர்.டி.ஓ விசாரணை!
ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு நாடார் மேடு தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் பீர் முகமது. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் முகிலா (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முகிலா ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், முகிலா வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் வலி குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் முகிலா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முகிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சூரம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணம் ஆகி 7 வருடங்களுக்குள் முகிலா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.