சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி... ராமநாதபுரத்தில் சோகம்!

 
fire accident

ராமநாதபுரத்தில் சமையல் செய்தபோது உடையில் தீப்பற்றியதில் பலத்த காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் வைகை நகரில் வசித்து வருபவர் விஜயகுமார். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி இந்துமதி(28). இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி இரவு தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது, அடுப்பை பற்ற வைக்க, ஆட்டோவிற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றியுள்ளார்.  அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பரவி பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் இந்துமதி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் விஜயகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 

ramanathapuram

இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த  இந்துமதி, சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த இந்துமதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இந்துமதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.