செய்யாறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் பலி... கொலையா? என போலீசார் விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவர் மதுபாட்டில் விற்பனை தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். பட்டு நெசவாளர். இவரது மனைவி விஜயலட்சுமி (39). இவர் அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மது விற்பனை தொடர்பாக விஜயலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை விஜயலட்சுமி, தனது இருசக்கர வாகனத்தில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, விஜயலட்சுமியின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் விஜயலட்சுமி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் முருகன், செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மதுபாட்டில் விற்பனை தொடர்பாக முன்விரோதத்தில் விஜயலட்சுமி கார் ஏற்றி கொல்லப்பட்டு உள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.