பல்லடத்தில் சாலையோரம் நின்ற ஆம்னிவேன் மீது லாரி மோதல்... 2 பெண்கள் பலி, 4 பேர் படுகாயம்!

 
palladam

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையோரம் நின்ற ஆம்னிவேன் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கோவையை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்துர் பகுதியை சேர்ந்தவர் கோவில் செல்வராஜ். இவரது மனைவி ராஜம்மாள். இவர்களது மகன் ஞானதுரை. இவருக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று கோவில் செல்வராஜ், தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் செல்வி, செல்வராஜ், அகஸ்டின் ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதிக்கு ஆம்னி வேனில் சென்றிருந்தார். அங்கு பெண் பார்த்துவிட்டு, அனைவரும் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

palladam

வழியில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் ஆம்னி வேனையை நிறுத்திவிட்டு, அவர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பொள்ளாச்சி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஆம்னி வேனின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வேனில் அமர்ந்திருந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ராஜம்மாள், செல்வராஜ் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே ராஜம்மாள் உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் பல்லடம் போலீசார் உயிரிழந்த 2 பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பட்டீஸ்வரன், பல்லடம் வட்டாட்சியரிடம் சரணடைந்தார். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டீஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.