சூலூரில் பாரம்பரிய ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி... கலைக் குழுவினருடன் நடனமாடி அசத்திய ஆட்சியர் சமீரன்!

 
cbe

கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் கலைக்குழுவினருடன் இணைந்து ஆட்சியர் சமீரன் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில் நேற்று சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, சங்கமம் கலைக்குழு சார்பில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆட்சியர் சமீரன், கௌமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சுவாமிகள், சூலூர் எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு, ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.

cbe

இதில் சங்கமம் கலைக்குழுவில் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட நடன பயிற்சி முடித்த சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பல்வேறு பாடல்களுக்கு பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டுகளித்த ஆட்சியர் சமீரன், பின்னர் பம்பை அடித்தும், குழுவினருடன் இணைந்து நடமாடியும் அவர்களை உற்சாகப்படுத்தினார். ஓயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து ஆட்சியர் நடனமாடிய நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

cbe

இந்த நிகழ்ச்சி குறித்து ஒயிலாட்ட பயிற்சியாளரும், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் கூறுகையில், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக கிராமங்கள் தோறும் இலவசமாக ஒயிலாட்டம், காவடியாட்டம் கற்றுக்கொடுத்து வருகிறோம். கிராமிய கலைகளை பயிலும் இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சி குறித்து பேசிய ஆட்சியர் சமீரன், பாரம்பரிய ஒயிலாட்டக் கலையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன்  கற்றுக்கொடுத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனகராஜுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.