பர்கூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: தாய், மகன் உள்பட 3 பேர் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகர் இருளர் காலனியை சேர்ந்தவர் சரசு(25). இவரது 7 வயது மகன் தமிழ். இந்த நிலையில் நேற்று சரசு, தனது மகனுடன் பர்கூரில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தார். பின்னர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சீனிவாசனுடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் நகர் அருகே சென்றபோது இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார், விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து புகாரின் அடிப்படையில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர். விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் எம்ஜிஆர் நகர் இருளர் காலனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.