திருச்சி அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சி அருகே தனியார் கல்லூரி விடுதியில் தஞ்சையை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சித்திக். இவரது மகள் அப்ரின் பாத்திமா(20). இவர் திருச்சி கே.கே.நகர் அடுத்த சாத்தனூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிசிஏ இறுதி ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அவரது அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, அப்ரின் பாத்திமா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கினார். இதனால்  அதிர்ச்சி அடைந்த தோழிகள் விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.

trichy gh

இது குறித்து விடுதி காப்பாளர் அளித்த தகவலின் பேரில், கே.கே.நகர் போலீசார், மாணவியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,அவரது அறையில் போலீசார் சோதனையிட்டபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.