அரசுப் பேருந்து படியிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி... அருப்புக்கோட்டை அருகே சோகம்!

 
dead body

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசுப்பேருந்து படியில் இருந்து தவறி விழுந்த தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது 19 வயது மகன் மாதேஸ்வரன். இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஓன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை கல்லூரி செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகருக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார். வாரத்தின் முதல் நாள் என்பதால் பேருந்தில் அதிகளவில் கூட்டம் இருந்த நிலையில், மாதேஸ்வரன் படியில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

aruppukottai

பாலவநத்தம் அருகே வளைவில் திரும்பியபோது பேருந்து படியில் நின்றிருந்த மாதேஸ்வரன் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா  போலீசார், மாதேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை சுரேஷ்குமார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.