திண்டுக்கல்லில் சாலையோரம் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
car fire

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 80 அடி சாலையில் சாலையோரம் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(36 ). இசை ஆசிரியரான இவர் தனது மனைவியின் பிரசவத்திற்காக, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் தங்கி உள்ளார். நாள்தோறும் மாலை நேரங்களில் திண்டுக்கல் ஆர்.எம் காலனி 80 அடி பிரதான சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சென்று உடற் பயிற்சி செய்து வந்தார்.

dgl fire

இந்த நிலையில், நேற்று மாலை ரமேஷ்  80 அடி சாலை ஓரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்தார். அப்போது, திடீரென அவரது கார் எஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. சிறிது நேரத்தில் காரில் தீப்பற்றி முன்பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை  ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்ப வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் காரின் எஞ்சின் மற்றும் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் முகப்பு விளக்கை அணைக்காததால் மின் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சாலையோரம் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.