திண்டுக்கல் அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதி விபத்து... பெண் வழக்கறிஞர் உள்பட இருவர் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் பெண் வழக்கறிஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் பாரதி. வழக்கறிஞர். இவர் நேற்று சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணைக்காக ஜுனியரான வழக்கறிஞர் மோனிகா உடன் சென்றிருந்தார். பின்னர் இருவரும் காரில் சாத்தூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை அசோக்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது அதிவேகமாக மோதியது.

dgl gh

இந்த விபத்தில், மோனிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மைக்கேல் பாரதி, ஓட்டுநர் அசோக்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அசோக்குமார் உயிரிழந்தார். மைக்கேல் பாரதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.