தென்காசி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி!

 
drowned

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள செல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவரது மகன் கவின்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன், கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். நண்பர்களுடன் கிணற்றில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக கவின்குமார் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றில் தேடினர். ஆனால் சிறுவனை மீட்க முடியவில்லை.

tiruvengadam

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, சிறுவன் கவின்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, திருவேங்கடம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.