டிராக்டர் கலப்பையில் தவறி விழுந்து சிறுவன் பலி... திண்டுக்கல் அருகே சோகம்!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே டிராக்டர் கலப்பையில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சூர்யா (13). இவர் சாணார்பட்டி அருகே மந்தநாயக்கன்பட்டியில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று சூர்யாவின் பெரியம்மா மகனான கதிரவன் என்பவர் வயலில் உழவு பணிக்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் சூர்யாவும் டிராக்டரின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சூர்யா டிராக்டரில் பொருத்தி இருந்த இரும்பு கலப்பையில் தவறி விழுந்தார்.

dead

இதில் கலப்பையில் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சாணார்பட்டி போலீசார், சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் டிராக்டர் கலப்பையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.