ஈரோட்டில் இரவுநேர ஊரடங்கை மீறியதாக 9 வழக்குகள் பதிவு... 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
erode 1

ஈரோட்டில் இரவுநேர ஊரடங்கின்போது கொரோனா விதிகளை மீறி வாகனங்களில் சுற்றியதாக 9 வழக்குகள் பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியது. மேலும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருவதால் அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

erode generic

இதைப்போல், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள 14 முக்கிய சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

இரவுநேர ஊரடங்கு என்றாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் தடையை மீறி சுற்றியதால் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தெரிவித்தார்