மதுரையில் துணிகரம்... தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை கொள்ளை!

 
robbery

மதுரை அருகே தனியார் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 69 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கருப்பாயூரணி அடுத்த வீரபாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று முருகனின் மனைவி வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து, முருகன் வீட்டை பூட்டிவிட்டு தனது நிறுவனத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று காலை முருகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. 

madurai

இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான முருகன், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 69 பவுன் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.