கோவையில் துணிகரம்... தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 67 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

கோவை சிங்காநல்லூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 67 பவுன் நகை,  2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள அலமேலு நகரை சேர்ந்தவர் ஹரிஷ்பாபு. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த புதன்கிழமை வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  இதனை தொடர்ந்து, அவரது பெற்றோரும் வெளியே புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ஹரிஷ்பாபு தனது அலுவலக பணியாளர் இளங்கோவை அனுப்பி வீட்டை பூட்டி உள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஹரிஷ்பாபுவின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஷ்பாபு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 67 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

singanallur

இதுகுறித்து ஹரிஷ்பாபு அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.