ஈரோட்டில் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு அபராதம் விதிப்பு!

 
police fine

ஈரோடு மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வந்ததாக கூறி ஒரே நாளில் 660 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1.32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதை அடுத்து பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

police

ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கின்போது  தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர். 

அதன் படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.