நெல்லை அருகே துணிகரம்... செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!
நெல்லை அருகே செல்போன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 66 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகர் 23-வது தெருவில் வசித்து வருபவர் நம்பி(41). இவர் சுத்தமல்லி விலக்கு பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நம்பி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர் அனைவரும் அன்று இரவு சுத்தமல்லிக்கு திரும்பி உள்ளனர். அப்போது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கடந்த திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நம்பி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, மர்மநபர்கள் பீரேவை உடைத்து உள்ளே இருந்த 66 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நம்பி, சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.