வேடசந்தூர் அருகே காரில் கடத்திவந்த 640 கிலோ குட்கா பறிமுதல் - இளைஞர் கைது!

 
gutka

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெங்களுருவில் இருந்து காரில் கடத்திவந்த 640 கிலோ குட்காவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திண்டுக்கல் வழியாக ராமநாதபுரத்துக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில்,  எஸ்.பி. தனிப்படை உதவி ஆய்வாளர் சேக் தாவூத் தலைமையிலான போலீசார் வேடசந்தூர் அடுத்துள்ள கல்வார்பட்டி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த சொகுசு காரை மறித்து தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளி அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திச்செல்வது தெரியவந்தது.

dgl

தொடர்ந்து, காரில் இருந்த 640 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கார் ஓட்டுநர் பெங்களூரை  சேர்ந்த அமர்பிரீத்சிங் (30) என்பவரை பிடித்து, கூம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.