சூளகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.6.50 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.6.50 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (39). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இந்த நிலையில், சுதாகர் நேற்று முன்தினம் தனது மனைவி சுவேதா, மகள்  ஆகியோருடன் ஓசூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை அனைவரும் கொலப்பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.

sulagiri

அப்போது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுதாகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.6.50 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதாகர் சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் மற்றும் தடயவியல். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.