தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை!

 
robbery

தஞ்சையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத் தனது குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், நேற்று காலை வினோத் வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து வினோத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அவர் தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தார். 

thanjavur

அதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதேபோல், பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஷ்வரி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.