திருப்பூரில் கடன் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது... 500 சிம்கார்டுகள், 3 லேப்டாப்கள் பறிமுதல்!

 
tirupur

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலம் பலரிடம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த பெண் ஓருவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். அந்த நிறுவனத்தினர் தவணைக்காலம் முடியும் முன்னரே பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும், அவரது வாட்ஸ்அப்புக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டி உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், திருப்பூர் மாவட்ட எஸ்பி சசாங் சாயிடம் புகார் அளித்தார். அதன் பேரில், பொதுமக்களை ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டும் கும்பலை பிடிக்க, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சித்ரா தேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த மர்ம கும்பலின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். 

tirupur

அப்போது, அந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, தனிப்படை போலீசார் காதர்பேட்டை பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு கட்டிடத்தில் கால் சென்டர் அமைத்து மோசடி கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்தனர்.  விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் (36), முகமது சலீம்(37), அனிஸ்மோன்(33) மற்றும் அஸ்ரப்(46) ஆகியோர் என்பது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 இணையதள மோடம், 3 லேப்டாப்கள், 500 சிம்கார்டுகள் மற்றும் 11 சிம் பாக்ஸ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாள்தோறும் 3500 பேரை தொடர்பு கொண்டு ஸ்பீடு லோன், கேண்டி பே, ஈஸி லோன், லக்கி மணி என 4 வெளிநாட்டு கடன் செயலிகள் மூலம்  ரூ.3000 முதல் ரூ.15,000 வரை கடன் வழங்கி உள்ளனர். பணம் தேவைப்பட்டவர்கள் மோசடி கும்பல் என தெரியாமல் தங்களது ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர்.  அவ்வாறு கடன் வாங்கியவர்கள், 2 வாரத்தில் திருப்பி செலுத்தியும், அனுப்பிய பணம் தங்களது வங்கிக்கணக்கிற்கு வரவில்லை என்றும், எனவே பணத்தை திரும்ப அனுப்புங்கள் இல்லாவிட்டால் உங்களது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாட்ஸ்அப் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.  இதனால் வேறு வழியின்றி பலர் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுக்கவே பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் எஸ்பியிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து தனிப்படையினரிடம் அவர்கள் சிக்கியுள்ளனர். மேலும், விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் பலரிடம் பணம் பறித்து ஏற்றியதும் தெரியவந்தது.

tiruppur

இது குறித்து பேசிய திருப்பூர் எஸ்பி சசாங் சாய்,  கடன் செயலி மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 5 பேரை கைது செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களின் பணத்தை மீட்டுத்தருவோம். இந்த சம்பவம் சங்கிலி தொடர் போல நீள்கிறது. வெளிநாட்டு மோசடி கும்பலுடன் இந்த மோசடி கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம். அப்படி யாராவது போன் செய்தால் 1930 என்ற போன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். கைதானவர்கள் 2 மாதங்களுக்கு மேலாக திருப்பூர் காதர்பேட்டையில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர், என அவர் தெரிவித்தார்.