பொன்னமராவதியில் வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்திரா நகரை சேந்தவர் முகமது ஹனிபா. இவர் கடந்த 31ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று மாலை ஹனிபா குடும்பத்தினர் பொன்னமராவதிக்கு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹனிபா மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

ponnamaravathi

அப்போது,  மர்மநபர்கள் வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 47 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஹனிபா, பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.