ஊத்தங்கரை அருகே நகைக்கடையில் 30 பவுன் நகை, 25 கிலோ வெள்ளி கொள்ளை!

 
robbery

ஊத்தங்கரை அருகே நகைக்கடையின் சுவரை துளையிட்டு 30 பவுன் தங்க நகை மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பத்தூரை சேர்ந்தவர் சேகர்(52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் ஸ்ரீவிக்னஷ்வர் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை வியாபாரம் முடிந்து சேகர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று காலை அவரது கடையின் சுவரில் பெரிய அளவில் ஓட்டை காணப்பட்டுள்ளது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள்,  கடை உரிமையாளர் சேகருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சேகர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடையில் இருந்த 25 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 30 சவரன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார்.

uthangarai

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் ரேஷ்மி மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு  செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.