பணகுடி அருகே வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை!

 
panagudi

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஓட்டுநர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் முருகன். இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், முருகன் சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கடந்த 7ஆம் தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலை முருகன் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.  அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது.

panagudi

இதனை கண்டு அதிர்ச்சியடை முருகன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது  தெரிய வந்தது. இதுகுறித்து முருகன் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.