நெல்லையில் பரிசு விழுந்துள்ளதாக கூறி பொதுமக்களிடம் பண மோசடி செய்த 3 பேர் கைது!

 
nellai

திருநெல்வேலி மாவட்டத்தில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தொடர் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கீழதென்கலத்தை சேர்ந்த காசிராமர் (50), என்பவரின் செல்போனுக்கு கடந்த அக்டோபர் 29-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு இருசக்கர வாகனம், டிவி, தங்கக்காசு போன்ற பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் பரிசு பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் என ஆசைவார்தை கூறியதால் மேற்படி காசிராமர் 2 தவணையாக ₹36,550 பணத்தை கட்டியுள்ளார். பின்னர் எந்தவித அழைப்பும் வராததால் மேற்படி எண்ணை தொடர்பு கொண்டபோது பரிசு தருவதாக ஏமாற்றி வந்துள்ளனர். இதேபோல், மேலச்செவலை சேர்ந்த சங்கர் (38) என்பவரும் ₹.42,100 பணத்தை கட்டி ஏமாந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, இருவரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் காவல் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டதின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி ராஜூ மேற்பார்வையில், சைபர் கிரைம் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவில் லெட்சுமி புரதத்தை சேர்ந்த இசக்கிமுத்து(28), பாரதியார் தெருவை சேர்ந்த அய்யனார்(24) மற்றும்‌ காளீஸ்வரன்(24) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஆம்னி கார், ஏடிஎம் அட்டை, 3 செல்போன்கள், எல்இடி டிவி, 3 மிக்ஸி, பரிசு கூப்பன்கள், மோடம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

arrest

போலீசாரின் விசாரணையில் 3 பேரும் கிராம பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து மலிவான விலையில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வந்ததும், சோப்பு வாங்கினால் பரிசு கூப்பன் இருப்பதாக கூறியும் பின் பொருட்கள் வாங்கும் நபர்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு , பரிசு விழுந்ததும் தொலைபேசியில் அழைத்து பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்து செல்வதாகவும் சென்றுள்ளனர். இதற்காக சிம் கார்டுகளை போலியாக பெற்று தினமும் ஏதேனும் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு அவர்களிடம் இருசக்கர வாகனம் மற்றும் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்ததுள்ளது. 

மேலும், மாவட்டத்தில் இம்மோசடியில் பொதுமக்கள் பல பேர் ஏமாற்றபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதால், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளித்தால் எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், முன்பின் தெரியாத நபர்கள் பொருட்கள் விற்பனை செய்ய வீட்டிற்கு  வந்தால் பொருட்கள் வாங்க வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படியாக இருப்பது தெரிய வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து கொண்டனர்.