பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 273 மனுக்கள் பெறப்பட்டன!

 
perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 273 மனுக்கள் பெறப்பட்டன. 

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கற்பகம் தலைமையில்  நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை,  பட்டா மாறுதல், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 273 பேர் அனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கற்பகம், அவற்றை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களை அலுவலர்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

perambalur collector

வாரந்தோறும் பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்தவார கூட்டத்தில்  விவாதிக்கப்படும் என்றும், உரிய காரணங்கள் ஏதுமின்றி மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தாமதாகும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் உரிய விளக்கம் கோரப்படும். எனவே மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கணபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.