ஈரோட்டில் நடந்த மெகா முகாமில் 25,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

 
vaccine

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 25 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, நேற்று மாநிலம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட ஆயிரத்து 597 மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை முகாம் நடைபெற்றது. 

vaccine

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதேபோல், 18 வயதுக்கு மேற்பட்ட 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி, 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1.5 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்களும், 70 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 448 பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 13 ஆயிரத்து 459 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11 ஆயிரத்து 760 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 667 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி நடந்த முகாமை விட கூடுதலாக 4 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.