ஈரோட்டில் பண்ணை வீட்டில் மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது; ரூ.3 லட்சம் பணம், 3 சொகுசு கார்கள் பறிமுதல்!

 
arrest

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் பணம், 3 சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருங்கல்பாளையம் சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து மெகா சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் சேர்ந்தவர்கள் தப்பியோட முயன்றனர்.

arrested

அவர்கள் 18 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக பணம் வைத்த சூதாடியது தெரியவந்தது. தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து 18 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 3.16  லட்சம் ரொக்கப் பணம், 3 சொகுசு கார்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.