13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... அண்ணன் உள்பட இருவர் கைது!

 
rape

மதுரையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உடன் பிறந்த அண்ணன், தோழியின் சகோதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி தன்னுடன் படிக்கும் தோழியின் வீட்டிற்கு சென்று வந்தபோது, அவரது அண்ணன் சரவணன்(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோழியின் வீட்டிற்கு சென்ற மாணவியை, சரவணன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, அவர் சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

arrest

இதனை அறிந்த சிறுமியின், 16 வயது அண்ணன் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரை பெற்றோர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, இதுகுறித்து மருத்துவமனை சார்பில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது. சிறுமியின் உடன்பிறந்த அண்ணன் மற்றும் தோழியின் சகோதரன் சரவணன் ஆகியோர் அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.