கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தற்கொலை முயற்சி

 

கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தற்கொலை முயற்சி

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் காதல் கணவரை மீட்டுத்தரக் கோரி இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் ரம்யா. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, உடன் பணியாற்றிய திண்டுக்கல்
ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், திடீரென அசோக் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினர்.

கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தற்கொலை முயற்சி

இதனை அடுத்து சில நாட்களில் அசோக்கின் சித்தி ஏற்பாட்டில், சேலத்தில் ரம்யாவுக்கும் அசோக்குக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்கள் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், ரம்யாவின் வீட்டிற்கு சென்ற அசோக்கின் உறவினர்கள், அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு அசோக் உடன் தொடர்புகொள்ள முடியாதவாறு மறைத்து வைத்துகொண்ட அவரது பெற்றோர், இதுகுறித்து கேட்க சென்ற ரம்யாவின் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசோக்கிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த ரம்யா, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கணவரை சேர்த்து வைக்கக் கோரி கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தற்கொலை முயற்சி

இந்நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் வேதனையடைந்த ரம்யா, இன்று ரெட்டியார்சத்திரத்தில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அசோக்கின் தாய் ராஜாத்தி மற்றும் தந்தை அருணாச்சலம் உள்ளிட்டோர் ரம்யாவை தாக்கிய நிலையில், இதனால் மனமுடைந்த ரம்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.