கடந்த 6 மாதத்தில் மட்டுமே 20,556 பேருக்கு டயாலிசிஸ் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது அனைவரும் அறிந்தவை தான். இதனை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம். அதன் விளைவாக தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் உட்பட அனைத்து அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நோய் பரவல் அதிகரித்ததால் அரசு வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் என அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம் செய்யப்பட்டன. இதனால் பல மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு தட்டுப்பாடு நிலவியதாக கூறப்பட்டது. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் 20,556 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், டயாலிசிஸ் செய்யப்பட்ட 20,556 பேரில் 1,077 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் அவர் கூறினார்.