குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Nov 7, 2020, 13:16 IST1604735207000
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் அடுத்த டி.ஆண்டியூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் பல முறை புகார் அளித்துள்ளனார். இருப்பினும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நேரில் சென்று சமாதானம் செய்ததை தொடர்ந்து, மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. மறியல் காரணமாக அப்பகுதியில்
சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.