திருப்பாவை, திருவெம்பாவை - 5: தீயில் இடப்பட்ட தூசு போலப் பொசுங்கும் பிழை!

 
Siva Siva

திருப்பாவை 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், இறைவனும் வட மதுரையில் (மதுரா) பிறந்தவனும், பெருக்கெடுத்து ஓடும் தூய யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், இடையர் குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகியின் வயிற்றுக்குப் பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிற்றைக் கட்ட, அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, காலையில் மார்கழி நீராடி வழிபாடு செய்தால், நாம் முன்பு செய்த பிழைகளும், செய்யும் பாவங்களும் கூட தீயினில் இடப்பட்ட தூசு போல் பொசுங்கிப் போய் விடும். ஆகவே, அந்த தூய பெருமானின் புகழ் பாடுவோம், அவன் குறித்தே பேசுவோம்.

திருவெம்பாவை 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்ட பெண்ணே! விஷ்ணுவும், பிரம்மனும் கூட உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். அப்படிப்பட்டவரை நாம் அறிவோம் என்று நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவரை அறிய முடியாத பெருமை கொண்டவன். நம்மைப் போன்ற சிறியவர்களின் தவற்றையும் மன்னிப்பவன். . அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். உனக்கு எங்கள் குரல் கேட்கவில்லையா?