வாழ்வில் மேன்மை தரும் விநாயகர் சதுர்த்தி : எந்த நேரத்தில், எப்படி வழிபடனும் தெரியுமா??

 
விநாயகர் சதுர்த்தி

ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு நான்காம் திதி அன்று வருவது தான் விநாயகர் சதுர்த்தி.  இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் இந்நாளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவோருக்கு நம்முடைய விக்னங்களை எல்லாம் தீர்த்தருள்வார் தொந்தி விநாயகர்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாளும் கலந்துனக்கு தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா.

என்று அவ்வையார் பாடியது போல் வாழ்வில் நலம் பெற விநாயகப் பெருமானை வழிபடுவோம்.  விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை வழிபடும் முறைகள் விரத முறைகள் மற்றும் அதன்  பலன்கள்  போன்றவற்றை அறிந்து கொள்வோம்.

விநாயகர்  சதுர்த்தி

பூஜை செய்யும் முறை :

விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்த குளித்து உணவு ஏதும் உண்ணாமல் இருக்க வேண்டும்.  முன்னதாக வீட்டையும், பூஜை அறையையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.  வாசலில் மாவிலையை தோரணமாக கட்ட வேண்டும். மாவிலை என்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பூஜை அறையில் நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மனையில் கோலமிட்டு கோலத்தின் மேல் இலையை வைத்துக் கொள்ளலாம். இலையின் நுனியை வடக்கு பார்த்தபடி வைப்பது சிறப்பு. அந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்பி பச்சரிசிக்கு நடுவே களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வைக்க வேண்டும்.

பூமியில் இருந்து கிடைத்தது அனைத்தும் பூமிக்கு செல்ல வேண்டும் என்கிற ஐதீகப்படி அதை உணர்த்துவதற்காக தான் களிமண் விநாயகர் வழிபாடு நடைபெறுகிறது.  எனவே களிமண் விநாயகர் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு விநாயகருக்கு பல வகையான பூக்கள், அருகம்புல் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய பல வகையான பழங்கள் விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகன் எனப்படும்  கொழுக்கட்டையை சமைத்து நைவேத்தியமாக வைத்து வணங்கலாம்.

விநாயகர் சிலை

வழிபாட்டு முறைகள் :

விநாயகர் துதி  பாடுவது,  கணபதியின் திருநாமங்களை சொல்வது,  விநாயகர் அகவல் படிப்பது போன்ற முறைகளில்  வணங்கலாம்.

கணபதி என்றிட  காலமும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே..

விநாயகரை வணங்கினால் அனைத்து துன்பங்களையும் விலக்கி,  வாழ்வுக்கு ஒளி ஏற்றுவார் என்பது நம்பிக்கை.

விநாயகரை வழிபடும்போது நாம் இரண்டு கைகளாலும் தலையின் மேல் இரு பக்கங்களிலும் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதால் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பு பெறும்.  அதுவும் 2 கையையும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பக்கத்திலும்,  இடது கையால் வலப்பக்கத்திலும் கொட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும்,  இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறுசுறுப்பை கொடுக்கிறது. மனம் அமைதி அடையும் உடல் சுறுசுறுப்படையும்.

 விநாயகர் சிலை

மூலாதாரத்தின் அதிபதி:

நம் உடலில் இருக்கும் மூன்று விதமான நாடுகளும் இணைந்துள்ள மூலாதாரத்துக்கு அதிபதி விநாயகரே ஆவார். மூலதார சக்தி எழும்பி மேலே உள்ள சுவாதிஷ்டானம் எனும் சக்தியுடன் சேர்ந்து கொள்ளும்போது குண்டலினி சக்தி மேலே எழும்பி பின் சகஸ்ராரத்தை அடையும். ஆராதார சக்தி குறித்து ஞானிகள் மட்டுமே உணர முடியும் என்றாலும் சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டும் வகையில் பூமியை பெண்ணாக உருவகப்படுத்தி அந்த மண்ணில் இருந்து உருவான விநாயகரை வழிபடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து உள்ளனர்.

அருகம்புல்லின் மகத்துவம் :

தேவர்களும் சப்தரிஷிகளும் விநாயகருக்கு அருகம்புல்லை சாட்சி வழிபட்டு விநாயகரிடம்,  ஆனைமுக கடவுளே இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுபவருக்கு எல்லாவிதமான மங்களங்களையும் அருள வேண்டும் என வேண்டினர். அப்படியே ஆகட்டும் என்று விநாயகரும் அருள் புரிந்தார்.  மேலும் அருகம்புல் இயற்கை நமக்கு அளித்த மிகச்சிறந்த மருந்தாகும்.  இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக் கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. அருகம்புல் சாறு எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி

பலன்கள்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை காண்பார்கள்.  அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்தும் மீண்டு வர முடியும். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பெருமானை விரதம் இருந்து வழிபடும் போது , வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று சுகபோகமாக வாழலாம்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலை 10  மணி முதல் 10.30 மணி வரையில் நல்ல நேரம் உள்ளது. ஒருவேளை காலை பூஜை நேரத்தில் தவறவிடும் பட்சத்தில் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை விநாயகப் பெருமானை வழிபாடு செய்து கொள்ளலாம்.