ஆடி மாத பூஜை : வருகிற 16 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஆடி மாதம் வருகிற 17 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இதை முன்னிட்டு, வருகிற் 16ம் தேதி மாலை 5 மணிக்கு ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்றைய தினம் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என்றும், இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலையில் நெய் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு 21ம் தேதியுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும் என்பதால், அன்றிரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இந்த ஆடி மாத சிறப்பு பூஜையை ஒட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. மேலும் நிலக்கல்லில் உடனடி முன்பதி வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.