முள்ளியவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – திருமா, சீமான் கண்டனம்!

 

முள்ளியவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – திருமா, சீமான் கண்டனம்!

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடந்தது.  இதன் நினைவாக 2019ஆம் ஆண்டு யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளியவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது.

முள்ளியவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – திருமா, சீமான் கண்டனம்!

இந்த நினைவிடம் இலங்கை அரசு உத்தரவின்படி நேற்று இரவு இடிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் ,பொதுமக்கள் ,தமிழ் தேசியக் கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடி இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.  இதனால் நிலைமையை கட்டுப்படுத்த அங்கு ராணுவம் மற்றும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது.இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே.

ஒற்றை இலங்கைக்குள் சிங்களர்களோடு இணைந்து தமிழர்கள் வாழ்கிறவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும்.அடக்கி ஒடுக்க முற்படுகிறபோதெல்லாம் சினம்கொண்டு திமிறி எழும் பேருணர்ச்சியைக் கொண்டு தமிழ்த்தேசிய இன மக்கள் நாங்கள் மீண்டெழுவோம். இந்திய வல்லாதிக்கமும், பன்னாட்டுச்சமூகமும் எங்களை வஞ்சிக்கலாம். துரோகம் விளைவிக்கலாம். ஒருநாள் இந்நிலை மாறும். களமும், காலமும் எங்கள் கைகள் வரப்பெறும். என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், “யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள  முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை  இடித்துள்ளனர்.  சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக க் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும்  #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்” என்று கூறியுள்ளார்.