மெரினாவில் என்னை ஓட ஓட விரட்டினார்கள்: ஜெ. தீபா கதறல்
தமிழக அரசு தங்கள் மீது வீண்பழை சுமத்துவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, “ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நாங்களே எதிர்பார்க்கவில்லை. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக ஏற்கவேண்டும். எனக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டுமென ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளேன். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா நிலையம் செல்லமாட்டேன். அதிமுக அரசு இந்த அளவிற்கு செல்லும் என்று நான் எதிர்பார்த்தது தான். நான் ஜெயலிதாவை பார்க்கக் கூடாது என அதிமுக அரசு தான் தடுத்தது. மெரினாவில் என்னை ஓட ஓட விரட்டினார்கள். எங்கள் அத்தை இருந்தவரை அந்த வீட்டிற்கு நான் வரக்கூடாதென அவர் சொல்லவில்லை.
ஊரடங்கு நேரத்தில் எங்களை மிரட்டுகின்றனர். பவரை கையில் வைத்துக் கொண்டு நான் அந்த வீட்டிற்கு வரக் கூடாது என இந்த அரசு சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ்சை கேளுங்கள். ஆதாயதத்திற்கு நடத்தினாரா என்று? உயர்நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என பைல் செய்தது யார்? எடுத்துப் பாருங்கள். இவர்கள் தான் தூண்டி விட்டு அத்தை இறந்த பின்னும் அவர் பெயரைக் கெடுக்கிறார்கள். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தூத்துக்குடியில் அப்பாவி மக்களை ஜெயலலிதா இருந்திருந்தால் சுட்டுயிருக்க மாட்டார்” என கூறினார்.