பட்டப்பகலில் பெண்ணின் காதை அறுத்த இளைஞர்: காதல் விவகாரத்தால் ஏற்பட்ட விபரீதம்!?
ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் செவிலியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம்: ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் செவிலியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொல்லத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் புஷ்பா. இவர் கொல்லத்தில் விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு புஷ்பா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த வழியில், நிதின் என்பவர் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் காதை அறுத்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் புஷ்பாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொல்லத்தில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் நிதின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும், புஷ்பா செவிலியராகவும் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததாகவும், இதையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் புஷ்பா மீது கோபத்திலிருந்த நிதின் அவரை கொலைவெறியுடன் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து நிதின் மீது 307 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதேபோல் கடந்த மார்ச் மாதம் கேரளாவில் 18 வயதான பெண் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி இளைஞர் ஒருவர் தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.