தலையில முடி கம்மியா இருந்தா என்ன மாதிரி பிரச்னை எல்லாம் வருது பாருங்க மக்களே!
இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள், வழுக்கைத் தலையால் திருமணம் தள்ளிப்போனவர்கள் என ரிஜெக்டட் கேஸ்களாக பார்த்து தன் வலையில் விழவைத்த அருணா, அடுத்ததாக 5 பேருக்கு வலைவிரித்தித்து காத்திருந்த வேளையில் போலீசார் கைதுசெய்துவிட்டனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த நரசிம்மா வேணுகோபால், தனது பெற்றோரை நல்லபடியாக கவனித்துக்கொள்ளும் மணமகளாக தேடி மேட்ரிமோனியல் இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். பி.எஸ்.சி நர்சிங் முடித்த அருணா என்ற லட்சணமான பெண்ணின் அறிமுகம் இணையதளம்மூலம் கிடைக்க, நேரம் கூடிவந்து திருமணத்தில் முடிந்திருக்கிறது. நான்கு மாதங்களே நீடித்த இந்த திருமணம் நாலாவது மாத முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டார் புதுப்பெண். சரி, கோவம் தீர்ந்தபிறகு வந்துவிடுவாள் ஆசை மனைவி என நரசிம்மா காத்திருக்க, இரவும் வரவில்லை, அடுத்த நாளும் வரவில்லை. இரவும் போனது பகலும் போனது, போன மனைவி மட்டும் திரும்பி வரவில்லை. மனைவியின் ஞாபகார்த்தமாக வீட்டில் அவர் விட்டுச்சென்ற பெட்டியை திறந்துப் பார்த்தால், அதில் அவர் மனைவியின் பல்வேறு திருமண போட்டோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். மனைவிக்கு ஏற்கெனவே பல்வேறு திருமணங்கள் நடந்திருந்தது ஒரு அதிர்ச்சி என்றால், தான் ஆசை ஆசையாக வாங்கி கொடுத்திருந்த நகைகளோடு அவர் சென்றது மற்றொரு அதிர்ச்சி.
அதிர்ச்சியோடு அதிர்ச்சியாக காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தபிறகுதான் தெரிந்தது, ஏற்கெனவே ஐதராபாத்தைச் சேர்ந்த காந்த் என்பவரோடு அருணாவுக்கு திருமணமாகி 15 லட்சத்தோடு வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு சென்றதும், அதன்பின் ஹரீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு 20 லட்சத்தோடு இரண்டே மாதங்களில் கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதும், அமெரிக்காவில் வசிக்கும் பவன்குமாரை திருமணம் செய்து 50 லட்சத்தோடு வெளியேறிய கதையும் புற்றீசல்போல கிளம்பியதைக் கண்டு நரசிம்மாவுக்கு தலைசுற்றல் வராத குறை. ஏமாற்றிய அருணாவின் டெக்னிக் குறித்து காவல்துறை விவரித்தது என்ன தெரியுமா? இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள், வழுக்கைத் தலையால் திருமணம் தள்ளிப்போனவர்கள் என ரிஜெக்டட் கேஸ்களாக பார்த்து தன் வலையில் விழவைத்த அருணா, அடுத்ததாக 5 பேருக்கு வலைவிரித்தித்து காத்திருந்த வேளையில் போலீசார் கைதுசெய்துவிட்டனர். எதற்கும் போலீஸ்காரர்கள் உசார்!