தனியாக வசித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி கொலை ! உடலை பார்த்து கதறி அழுத மனைவி !
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐதராபாத்தில் சுரேஷ் பணியாற்றி வரும் நிலையில் வங்கி ஊழியரான அவரது மனைவி இந்திரா பணியிடமாற்றம் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார்.
2 தினங்களுக்கு முன்னர் சுரேஷ் பணிக்கு செல்லவில்லை. அவரை அலுவலக நண்பர்கள் தொடர்பு கொல்ல முடியாததால் அவரது மனைவி இந்திராவுக்கு தகவல்கொடுத்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்த அவரது மனைவி இந்திரா தொடர்பு கொண்டபோதும் பதில் இல்லாத்தால் உடனடியாக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
சுரேஷின் வீட்டிற்கு சென்ற இந்திரா, வீட்டை திறக்க முடியாததால் காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர் விரைந்து வந்த காவல்துறை இஸ்ரோ விஞ்ஞானி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு விஞ்ஞானி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதை பார்த்த அவரது மனைவி இந்திரா கதறி அழுதார். பின்னர் சுரேஷின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுரேஷ் தலையில் கனமான பொருளால் தாக்கியதற்கான வடு இருந்துள்ளது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வு முடிவுகளுக்கு பின்பு விஞ்ஞானி சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.