‘டிரைவரை தாக்கிய பின் என்னை காரில் இருந்து தரதரவென்று இழுத்தனர்’ : சிறுவர்கள் மீது முன்னாள் மிஸ் இந்தியா புகார்!
இரவு நேரத்தில் சிறுவர்கள் சிலர் தன்னை தாக்கியதாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
கொல்கத்தா: இரவு நேரத்தில் சிறுவர்கள் சிலர் தன்னை தாக்கியதாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த உஷோஷி செங்குப்தா கடந்த 2010-ஆம் ஆண்டு, மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரவைக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘கடந்த 17 ஆம் தேதி நானும் என் நண்பரும் இரவு 11.40 மணிக்கு உபேர் காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தோம். அப்போது சிறுவர்கள் நாங்கள் வந்த காரின் மீது மோதினர். இதனால் டிரைவருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கு 15ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று கூடினார்கள். அவர்கள் டிரைவரை தாக்க தொடங்கினர். நான் அதை வீடியோ எடுத்தேன். கீழே இறங்கி கத்தினேன். பின்பு அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை உதவிக்கு அழைத்தேன். ஆனால் சம்பவம் நடந்த இடம் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது இல்லை எனக்கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் அவர்களிடம் நீங்கள் வரவில்லை என்றால் அவர்கள் டிரைவரை கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினேன். எனவே அந்த அதிகாரிகள் வர சம்மதித்தார்கள்.
போலீஸ் வந்தவுடன் சிறுவர்கள் போலீசை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்பு காலையில் இது குறித்து புகார் கொடுக்கலாம் என்று நினைத்து மீண்டும் காரில் கிளப்பினோம். ஆனால் அவர்கள் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். என் நண்பர் அவர் வீட்டில் இறங்கிய போது அவர் வீட்டிலிருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் என்னை காரில் இருந்து வெளியே இழுத்தனர். நான் கத்தினேன். இதனால் அங்கிருந்தவர்கள் உதவிக்கு வந்தார்கள். பின்பு இது குறித்து என் வீட்டில் தகவல் கூறிவிட்டு அவர்களுடன் இரவு 1.30 மணிக்கு பவானிபோர் காவல்நிலையத்திற்குச் சென்றேன். அவர்கள் ஏளனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் என் புகாரை பெற்று கொண்டனர். ஆனால் டிரைவரின் புகாரை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஒரே புகாருக்காக இரண்டு எப்ஃஐஆர் பதிய முடியாது என்று கூறிவிட்டனர்’ என்று நடந்த சம்பவத்தைப் பதிவிட்டுள்ளார் உஷோஷி செங்குப்தா.
தொடர்ந்து பதிவிட்டுள்ள அவர், ‘யாராவது உங்களை தாக்கினாலோ, உங்களிடம் அத்துமீறினாலோ காவல்நிலையம் ஓடுவதற்கு முன்பு, அது உங்கள் எல்லைக்குட்பட்ட காவல்நிலையம் தானா? என்று பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்கள் புகாரை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். மிஸ் இந்தியா பட்டம் வென்ற எனக்கே இந்த கதிதான். வெட்கக்கேடு’ என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
We have taken this incident very seriously and seven persons have been arrested so far. On the order of the Commissioner of Police, Kolkata, an
inquiry regarding the non-registration of F.I.R. has been initiated into this incident, at a very senior level.— Kolkata Police (@KolkataPolice) June 18, 2019
இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டதையடுத்து இது குறித்து பதிலளித்துள்ள கொல்கத்தா போலீசார், இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று பதிலளித்துள்ளனர்.