சாலையோரம் வசித்த குடும்பம்: மனைவியின் கண்முன்னே கணவன் பரிதாப பலி!
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண். இவருக்கு முத்தாலு என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
காஞ்சிபுரம்: சாலையோரம் வசித்துவந்த குடும்பத்தின் மீது கார் மோதியதில் மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண். இவருக்கு முத்தாலு என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். குடும்பத்துடன் சாலையோரத்தில் தங்கி வந்த அருண் அங்கு கிடைக்கும் பிளாஸ்டிக் மற்றும் காகிதங்களை எடுத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி இரும்பு தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு சாலையோரம் படுத்திருந்த அருண், மற்றும் அவரது மனைவி முத்தாலு மீது மோதியது. இதில் மனைவியின் கண்முன்னே அருண் உடல் நசுங்கிப் பலியானார். இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்தாலு மற்றும் அவரது குழந்தை மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு தலைமறைவான கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மனைவி கண்முன்னே கணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.