கழுத்தை நெரித்த கிரெடிட் கார்டு கடன்: குடும்பத்துடன் தற்கொலை முயன்றவரின் சோக கதை!
கிரெடிட் கார்டினால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: கிரெடிட் கார்டினால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலையில் அப்பகுதி போலீசாருக்கு தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில் ஒரு குடும்பமே நான்காவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 34 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த அவரின் மனைவி மற்றும் 4 வயது குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனையில் சுயநினைவு திரும்பிய அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லி கிழக்கு பகுதி குடியிருப்பில் நான்காவது மாடியில் வசித்து வந்தோம். என் கணவர் பல்வேறு வங்கிகளிடம் இருந்து கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியதால் ரூபாய் எட்டு லட்சத்திற்குக் கடன் ஏற்பட்டது. வங்கிகளிடமிருந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. கடனை அடைக்க வழியில்லை. இதனால் இறந்து விடலாம் என்று கணவர் சொல்லிக்கொண்டிருந்தார். கடந்த 22 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு என் கணவர் குழந்தையைக் கையில் பிடித்தபடி மொட்டை மாடிக்குச் சென்றார். நானும் அவரைத் தொடர்ந்து சென்றேன். அவர் குழந்தையைக் கையில் பிடித்தபடி கீழே குதித்தார். நானும் அவர் பின்னாலேயே குதித்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நானும் மகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்துவிட்டோம். அவர் இறந்து விட்டார்’ என்று கூறி கதறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.