கருக்கலைப்பு செய்ய போன பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்: விருதுநகரில் பரபரப்பு!
அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பை செய்ய சென்ற பெண்ணக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் : அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு முறையாக கருக்கலைப்பு செய்யாமல் , குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகிலுள்ள மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசை. இவரது மனைவி புனிதா.இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இருப்பினும் ஐந்தாவதாக புனிதா கருத்தரிக்க, கருவை கலைக்க அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மதுரை அரசு மருத்துவ மனைக்கு செல்லுமாறு அறிவுறுத்த , புனிதா அங்கு செல்லாமல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
முதலில் கருக்கலைப்பு செய்துவிட்டு குடும்பக்கட்டுப்பாடும் செய்துவிடலாம் என்று புனிதாவிடம் தெரிவித்த விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கருக்கலைப்பை அரைகுறையாகப் பண்ணிவிட்டு, , குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். எட்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு புனிதா மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் புனிதாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அவருக்கு சரியாக கருக்கலைப்பு செய்யவில்லை என்பதை தெரிந்துகொண்டு அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த புனிதா, மீண்டும் ஏதாவது தவறாகி விடுமோ என்று பயந்து தனியார் மருத்துவமனையிலேயே பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
முறையான கருக்கலைப்பு இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள புனிதா தனியார் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் என சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.