உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கொலையாளி… இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த கேரள போலீஸ்!
பெற்ற தாயை கொலை செய்ய உதவிய நண்பனை துண்டு துண்டாக வெட்டி வீசிய குற்றவாளியை இரண்டரை ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்ற தாயை கொலை செய்ய உதவிய நண்பனை துண்டு துண்டாக வெட்டி வீசிய குற்றவாளியை இரண்டரை ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோழிக்கோட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் ஒருவரின் உடல் பாகங்கள் அங்காங்கே கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர். யார் அவர் என்று தெரியாமல் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
கொலை செய்யப்பட்ட நபரின் கைவிரல் ரேகைகள் பழைய குற்றவாளிகள் ரேகையோடு ஒத்துப்போனது போலீசாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகள் பட்டியலிலிருந்த நபரின் பெயர் இஸ்மாயில் என்று தெரிந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது பல மாதங்களாக இஸ்மாயில் காணாமல் போயிருந்தது தெரிந்தது. அவருடைய அம்மாவின் ரத்த மாதிரியை எடுத்து டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். முடிவு, இருவரும் ரத்த உறவினர்கள் என்பதும், கொல்லப்பட்டது இஸ்மாயில்தான் என்பதும் உறுதியானது.
இஸ்மாயிலின் நண்பர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எந்த தகவலும் போலீசுக்கு கிடைக்கவில்லை. அந்த பகுதியில் நிகழ்ந்த விசித்திரமான மரணங்கள், மாயமான சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்த ஜெயவள்ளி என்ற 70 வயது மூதாட்டி மரணம் அடைந்ததும், அதன் பிறகு அவரது மகன் ப்ரிஜூ சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு ஊரைவிட்டு போனதும் தெரியவந்தது. விசாரணையில் அவருக்கும் இஸ்மாயிலுக்கும் நட்பு இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ப்ரிஜூவை போலீசார் வலைவீசித் தேடினர். அப்போது, அவர் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் வசித்து வருவதை கோழிக்கோடு போலீசார் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அவர், “என்னுடைய அம்மா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். ஆனால், எனக்கு பணம் தரமறுத்தார். இதனால், இஸ்மாயிலை ஏற்பாடு செய்து அம்மாவிடமிருந்து பணம் கடனாக வாங்கச் செய்தேன். அதை அவர் என்னிடம் கொடுத்தார். பிறகு அம்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். இதற்கு உதவினால் நிறைய பணம் தருகிறேன் என்று இஸ்மாயிலிடம் ஆசைவார்த்தை கூறினேன்.
அவரும் உதவினார். இருவரும் செய்து என்னுடைய அம்மாவின் கழுத்தை நெறித்து கொலை செய்தோம். அதன் பிறகு மின்விசிறியில் புடவையை மாட்டி, தற்கொலை செய்தது போல செட் செய்தோம். அதன் பிறகு பணம் கேட்டு இஸ்மாயில் நெருக்கடி கொடுத்தார். இதனால், ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வரும்படி அழைத்தேன். அவரும் வந்தார், உணவு, மது எல்லாம் கொடுத்தேன். சுயநினைவை இழக்கும் அளவுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்தேன்.
அவர் போதையில் படுத்ததும், கழுத்தை நெறித்து கொலை செய்தேன். உடல் பாகங்களை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு பல இடங்களில் வீசினேன். அதன்பிறகு ஊரை காலி செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். ஆனாலும் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்” என்றார்.