காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து இளம்பெண்
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காதலனை கொன்று வீட்டு பாத்ரூருமுக்குள் அடைத்து தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 104-ஆம் எண் வீடு இரண்டரை மாதங்களாக பூட்டியிருந்தது. ஆனால் அந்த வீட்டினுள் இருந்து தண்ணீர் கசிவதாக குடியிருப்பில் வசிக்கும் மற்ற வீட்டர்கள், வீட்டு உரிமையாளர் அஜய் பாட்டீலுக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வீட்டு உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைதாரரைதொடர்புகொள்ள பலமுறை முயன்றும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த பெண்ணிடமிருந்து பாட்டீலுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதில், அவள் தன் காதலனைக் கொன்றதை ஒப்புக்கொண்டு, அவனது உடல் குளியலறைக்குள் இருப்பதாகக் கூறியிருந்தாள். மேலும், அந்த உடலை அப்புறப்படுத்துமாறு வீட்டு உரிமையாளரையும் அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். இந்த செய்தியைக் கேட்டவுடன், பாட்டீல் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, குளியலறையில் ஒரு சாக்கினுள் திணிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலத்தைக் கண்டனர். கூர்மையான ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவரின் தலையில் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரத்தக் கறைகளைக் கழுவி அகற்றுவதற்கும் மற்ற ஆதாரங்களை அழிப்பதற்கும் குளியலறை குழாயை வேண்டுமென்றே திறந்து விடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவே பல வாரங்களாக நடைபாதையில் தண்ணீர் கசிந்ததற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொலைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட பெண் கொல்கத்தாவிற்குத் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரைத் தேடிப்பிடிப்பதற்காக மூன்று சிறப்பு காவல் குழுக்கள் அந்நகரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. கொலைக்கான தெளிவான காரணத்தை காவல்துறை இன்னும் கண்டறியவில்லை, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

